சென்னை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி உடனான பலப்பரீட்சைக்கு தங்கள் அணி தயார் என ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் சமன்ஸ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 குரூப்-1 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய நிலையில் இதில் விளையாடுகிறது.
“நிச்சயம் இந்திய அணி எந்த வகையில் ஆட்டத்தை அணுகும் என்பதை நாங்கள் அறிவோம். கிட்டத்தட்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி எப்படி இன்னிங்ஸை அணுகியதோ அது போலவே இந்தியாவும் ஆடும். அதனால் எங்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும். அழுத்தமான சூழலை சமாளிப்பது எப்படி என்பதை அறிவோம். அமைதியாக இருந்து எப்படி எதிரணி பேட்ஸ்மேனின் ரிதத்தை சற்று சிதைப்பது என்பதையும் முயற்சிப்போம்.
நாங்கள் கணிக்க முடிகின்ற அணியாக இருக்கிறோம். அதில் நாங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும். சென்னை மைதானத்தின் பெரிய அவுட்-பீல்ட் எங்களுக்கு உதவும் என கருதுகிறோம்” என ஜஸ்டின் தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உயிர்ப்போடு இருக்கும்.