விளையாட்டு

“என்னுடைய கிரிக்கெட் முழு​வதும் மனரீதியிலானது” - மனம் திறக்கும் விராட் கோலி

செய்திப்பிரிவு

ராஞ்சி: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் ராஞ்​சி​யில் நடை​பெற்ற முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 17 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இந்த ஆட்​டத்​தில் 37 வயதான இந்​திய கிரிக்​கெட் அணி​யின் நட்சத்திர வீரர் விராட் கோலி 120 பந்​துகளில் 135 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளில் இது அவரது 52-வது சதமாக​வும் அமைந்​தது.

ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி போட்​டிக்கு பின்​னர் கூறிய​தாவது: அதிக அளவி​லான பயிற்சி முறை​களில் நான் எப்போதும் நம்​பிக்கை கொண்​ட​வன் கிடை​யாது. எனது கிரிக்கெட் முழு​வதும் மனரீ​தியி​லானது. உடல் ரீதி​யாக கடின​மாக உழைக்கிறேன். எனது உடற்​தகுதி சிறந்த நிலை​யில் இருக்​கும்​வரை நான் சிறப்​பாக உணர்​வேன். நான் 300-க்​கும் மேற்​பட்ட ஒரு​நாள் போட்டிகளில் விளை​யாடி உள்​ளேன்.

விளை​யாட்​டுடன் தொடர்​பில் இருந்து பயிற்​சி​யின் போது பந்துகளை வலு​வாக அடிக்க முடி​யும்​ பட்​சத்​தி​லும், வலைகளில் ஒரு மணி நேரம் அல்​லது இரண்டு மணி நேரம் பேட்​டிங் செய்ய முடி​யும் ​பட்​சத்​தி​லும், நாம் சிறந்த நிலை​யில் இருக்​கிறோம் என்​பதை அறிந்து கொள்ள முடி​யும். ஃபார்​மில் இல்லை என்​றால், வலைகளில் அதி​க​மாக விளை​யாடு​வதை விரும்​பவேண்​டும். அதைத் தவிர, மனதள​வில் தயா​ராக இருப்​பதும், விளை​யாட்டை ரசிப்​பதும் முக்​கி​யம்.

ராஞ்சி ஆடு​களத்​தின் தன்​மையை அறிந்​து​கொள்​ளவே இங்கு முன்​ன​தாக வந்து சேர்ந்​தேன். ஆட்​டத்​தைப் பற்றி யோசிக்​கும்​போது நான் தீவிர​மாக​வும் கூர்​மை​யாக​வும் இருப்​பதை உணர்ந்தால் சிரமமின்றி விளை​யாட முடி​யும் என்​பது எனக்​குத் தெரி​யும். எனக்கு 37 வயதாகிறது. எனவே, என் உடலை​யும் நான் கவனித்துக் கொள்ள வேண்​டும்.

முதல் ஒரு​நாள் போட்டி சிறப்​பான வகை​யில் அமைந்​தது. 20 முதல் 25 ஓவர்​கள் வரை ஆடு​களம் ரன்​கு​விப்​புக்கு சாதக​மாக இருந்​தது. ஆனால் அதன் பின்​னர் மந்​த​மாகி​ விட்​டது. பந்​துகளை கவனித்து மகிழ்ச்​சி​யுடன் விளை​யாட விரும்​பினேன். தொடக்கத்தை பெற்ற பின்​னர் அனுபவம் கைகொடுக்​கும். அதைக்​கொண்டு இன்​னிங்​ஸை கட்​டமைத்​து​விடலாம்​. இவ்​வாறு வி​ராட்​ கோலி கூறினார்.

SCROLL FOR NEXT