ஆர்சிபி வீரர் விராட் கோலி
ராய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்த ஆட்டத்தில் சதம் விளாசி இருந்தார் விராட் கோலி.
இந்த சீசனின் 57-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி. ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. இருப்பினும் ஓவர்கள் குறைக்கப்படாமல் இரவு 8.45 மணி அளவில் சற்று தாமதமாக தொடங்கியது. இதில் ஆர்சிபி டாஸ் வென்று, பந்து வீச முடிவு செய்தது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அங்கிரிஷ் ரகுவன்ஷி 71, ரிங்கு சிங் 49, கேமரூன் கிரீன் 32 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், ராஷிக் சலாம் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
193 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டியது. பெத்தெல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். தன பின்னர் வந்த தேவ்தத் படிக்கல் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. கார்த்திக் தியாக வீசிய பந்தில் படிக்கல் ஆட்டமிழந்தார். 27 பந்துகளில் 39 ரன்களை அவர் எடுத்திருந்தார். கேப்டன் ரஜத் பட்டிதார் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி நான்கு ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியின் வசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. 17-வது ஓவரில் 15 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. அடுத்த ஓவரில் 9 ரன்கள் எடுத்தது. இருப்பினும் டிம் டேவிட் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் சதம் விளாசினார் விராட் கோலி. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவருக்கு 9-வது சதமாக அமைந்தது.
19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது. கோலி 105, ஜிதேஷ் 8 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஆர்சிபி. 12 ஆட்டங்களில் 8 வெற்றி உடன் 16 புள்ளிகளை அந்த பெற்றுள்ளது. நெட் ரன் ரேட் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸை முந்தியுள்ளது ஆர்சிபி.