பெங்களூரு: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. டெல்லி வீரர்கள் ரிஷப் பந்த், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் டெல்லி, குஜராத் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 61 பந்துகளில் 77 ரன்கள் குவித்து விஷால் ஜெய்ஸ்வால் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 79 பந்துகளில் 70 ரன்களைச் சேர்த்தார். ஹர்ஷ் தியாகி 40 ரன்களும் சிமர்ஜீத் சிங் 15 ரன்களும் சேர்த்தனர்.
குஜராத் அணியின் விஷால் ஜெய்ஸ்வால் 4 விக்கெட்களையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்களையும், சிந்தன் கஜா, நாக்வாஸ்வாலா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர், 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 47.4 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
குஜராத் அணி சார்பில் ஆர்ய தேசாய் 57, உர்வில் படேல் 31, அபிஷேக் தேசாய் 26, சவுரவ் சவுகான் 49, ஹேமங் படேல் 10, விஷால் ஜெய்ஸ்வால் 26 ரன்கள் சேர்த்தனர்.
டெல்லி அணி சார்பில் பிரின்ஸ் யாதவ் 3, அர்ப்பித் ராணா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2, நவ்தீப் சைனி, சிமர்ஜீத் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.