வதோதரா: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் ஷுப்மன் கில்லுக்கு இடம் வழங்கப்படவில்லை. டி 20 போட்டிகளில் மோசமான பார்ம் காரணமாக அவர், தனது இடத்தை இழந்திருந்தார். உலகக் கோப்பை தொடருக்கான அணி அறிவிப்புக்கு பின்னர் இந்திய அணி எதிர்கொள்ளும் தொடராக நியூஸிலாந்து போட்டி அமைந்துள்ளது.
இதனால் இந்தத் தொடரில் ஷுப்மன் தனது மட்டை வீச்சால் பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். மேலும் அவர், ஸ்டிரைக் ரேட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையை நோக்கி பயணித்து வரும் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறந்த பார்மில் இருப்பதால் அவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
ஷுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தனது முதல் சதத்தை விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளியே அமரவைக்கப்படக்கூடும். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஸ்ரேயஸ் ஐயர் 4-வது இடத்தில் களமிறங்கக்கூடும். அவரைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் இடம் பெறுவார்.
இதனால் ரிஷப் பந்த்துக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ஆல்-ரவுண்டர்களாக நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா இடம் பெறக்கூடும். பிரதான சுழற் பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் சேர்க்கப்படக்கூடும். ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரை நம்பியே இந்திய அணியின் வேகப் பந்து வீச்சு துறை களமிறங்குகிறது.
கடந்த ஆண்டில் நியூஸிலாந்து அணி இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது. இந்த தோல்விகளுக்கு தற்போதைய தொடரில் இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
நியூஸிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் பலர் இந்தத் தொடரில் விளையாடவில்லை. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் மிட்செல் சாண்ட்னர் விளையாடாததால் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. டாம் லேதம், தனது முதல் குழந்தை பிறப்பையொட்டி தாயகம் திரும்பி உள்ளார்.
முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சன், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் தொழில் முறை டி 20 தொடரில் விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டபி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மேட் ஹென்றி குணமடைந்துள்ள போதிலும், அவர் டி 20 தொடரில் மட்டுமே விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் பேட்டிங்கில் டெவன் கான்வே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும். இளம் வீரர்களான ஆதித்யா அசோக், ஜெய்டன் லெனாக்ஸ் ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.
நேரம்: பிற்பகல் 1:30 | நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் |