விளையாட்டு

நெதர்லாந்தை 114 ரன்களில் சுருட்டியது இந்திய மகளிர் அணி: Women’s T20 WC

ஸ்மிருதி, ஷெபாலி, ஸ்ரீ சரணி அசத்தல் ஆட்டம்

வேட்டையன்

லீட்ஸ்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியை 114 ரன்களில் ஆல் அவுட் செய்து, இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உட்பட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. தலா ஆறு அணிகள் வீதம் இரு பிரிவுகளாக முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.

இதில் குரூப் ‘ஏ’ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கடந்த 14-ம் தேதி அன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்களில் இந்தியா வீழ்த்தியது. இந்நிலையில், புதன்கிழமை அன்று நெதர்லாந்து அணி உடன் இந்தியா விளையாடியது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 74, ஷெபாலி வர்மா 55 ரன்கள் எடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்மிருதி. ரிச்சா கோஷ் 8 பந்துகளில் 20 ரன்களை சேர்த்தார்.

210 ரன்களை விரட்டிய நெதர்லாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா சார்பில் பந்து வீசிய ஸ்ரீ சரணி 4, ஷெபாலி 3, நந்தினி 2, தீப்தி 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். நெதர்லந்து அணி 17.3 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 95 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் ரன் ரேட் அடிப்படையில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

SCROLL FOR NEXT