மும்பை: எதிர்வரும் ‘டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை - 2026’ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துகிறார். துணை கேப்டனாக அக்சர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவும், இலங்கையும் இணைந்து இந்தத் தொடரை நடத்துகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த டி20 கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தொடரை நடத்தும் மற்றொரு அணியான இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், ஜிம்பாப்வே அணிகளும் உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).
இந்த அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த சில போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட ஷுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். அணியுடன் பயணித்து வந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக அணியில் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார்.
‘ஜிதேஷ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பருமான சஞ்சுவுக்கு சரியான மாற்று வீரராக இஷான் கிஷன் இருப்பதால் அவரை தேர்வு செய்துள்ளோம்” என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் அகர்க்கர் தெரிவித்தார்.