கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 7 மணிக்கு நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகள் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் ஜிம்பாப்வே, இலங்கை, ‘சி’ பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, ‘டி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தன.
இந்த 8 அணிகளும் குரூப் 1, குரூப் 2 என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 1-ல் இந்தியா, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-ல் நியூஸிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணி தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இரவு 7 மணிக்கு கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான், நியூஸிலாந்துடன் மோதுகிறது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் 3 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்திருந்தது.
தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்த அந்த அணி, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்தது. டாப் ஆர்டரில் டிம் ஷெய்பர்ட், ஃபின் ஆலன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேவேளையில் நடுவரிசையில் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல் ஆகியோரிடம் இருந்து தொடர்ச்சியான செயல் திறன் வெளிப்படவில்லை. இதில் கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு அரை சதம் அடித்துள்ளனர். ஆனால் இவர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ரச்சின் ரவீந்திரா 4 ஆட்டங்களில் ஒட்டுமொத்தமாக 72 ரன்களே சேர்த்துள்ளார். இதில் கனடா அணிக்கு எதிராக சேர்த்த 59 ரன்களும் அடங்கும். இது ஒருபுறம் இருக்க நடப்பு தொடரில் தனது லீக் ஆட்டங்களை இந்தியாவில் விளையாடிய நியூஸிலாந்து அணி தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்களை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் விளையாட உள்ளது.
இது அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால்தரக்கூடும். அதேவேளையில் டாப் ஆர்டரில் ஃபின் ஆலன், டிம் ஷெய்பர்ட் ஆகியோர் தங்களது அதிரடியால் அமைத்து கொடுக்கும் சிறப்பான தொடக்கத்தை நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டு 180 வரையிலான ஸ்கோரை குவித்தால் வெற்றிக்கான வழிகளை கண்டறியலாம். மேலும் இலக்கை துரத்தினாலும் நடுவரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தங்களது சீரான வேகத்தால் பலம் சேர்க்கக்கூடும். இருப்பினும் இலங்கை ஆடுகளத்துக்கு தகுந்தவாறு தங்களது திட்டங்களை அவர்கள், மாற்றி அமைத்து செயல்படுவதில் கவனம் செலுத்தக்கூடும்.
இந்த வகையில் இவர்கள் நக்குல் பால், வேகம் குறைந்த பவுன்சர் மற்றும் லெக் கட்டர்களை பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு எதிராக பயன்படுத்தி அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி பலம் சேர்க்கக்கூடும். இவர்களுக்கு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களான ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ் உறுதுணையாக இருக்கக்கூடும்.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தியாவிடம் தோல்வி கண்டிருந்தது. அந்த அணி தனது லீக் ஆட்டங்களை முழுமையாக இலங்கையில் விளையாடி உள்ளதால் ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்திருக்கக்கூடும்.
இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள், மந்தமான ஆடுகளத்தில் திறம்பட செயல்பட தேவையான வேகம் மற்றும் நீளத்தை அறிந்துவைத்துள்ளனர். இது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது, சைம் அயூப், முகமது நவாஷ், ஷதப் கான் ஆகியோர் தங்களது சுழற்பந்து வீச்சால் நியூஸிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் சாஹிப்சதா ஃபர்ஹான், ஷதப் கான் ஆகியோரை தவிர மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படவில்லை.
நமீபியா அணிக்கு எதிராக சதம் விளாசிய சாஹிப்சதா ஃபர்ஹான் நடப்பு தொடரில் 222 ரன்கள் சேர்த்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஷதப் கான் 88 ரன்கள் எடுத்துள்ளார். அனுபவ வீரரான பாபர் அஸம் நடப்பு தொடரில் 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் அவரது மட்டை வீச்சு நவீன கால டி 20 போட்டிக்கு உகந்தபடி இல்லை என்ற கருத்துகளும் மேலோங்கி உள்ளன.
இன்றைய ஆட்டத்தில் அவர், போதிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை என்றால் அணியில் தனது இடத்தை தக்கவைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது. ஏனெனில் ஃபஹர் ஜமான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க பாகிஸ்தான் அணி நிர்வாகம் தயாராக உள்ளது.
எப்படி இருப்பினும், நியூஸிலாந்து போன்ற அனுபவம் வாய்ந்த அணிக்கு எதிராக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பெரிய அளவிலான ஸ்கோரை குவித்து நெருக்கடி கொடுக்க முடியும். கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷாகின் ஷா அப்ரிடி நீக்கப்பட்டு இருந்தார். நடப்பு தொடரில் அவர், 3 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி உள்ளார்.
அதேவேளையில் ஓவருக்கு சராசரியாக 11 ரன்களுக்கு மேல் தாரை வார்த்திருந்தார். ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி தனது வீச்சில் ஷாகின் ஷாவால் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளமுடிவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஷாகின் ஷாவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.