கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கானர் எஸ்டர்ஹுய்சன் 33 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசினார். ரூபின் ஹெர்மான் 39, வியான் முல்டர் 39, தியான் பாரஸ்டர் 21 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் பென் சீயர்ஸ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
188 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக பெவன் ஜேக்கப்ஸ் 36, டிம் ராபின்சன் 25, ஜேம்ஸ் நீஷம் 24, டேன் கிளீவர் 22 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்டு கோட்ஸி, வியான் முல்டர், ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிக்க அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-2 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக கானர் எஸ்டர்ஹுய்சன் தேர்வானார். அவர், இந்தத் தொடரில் 200 ரன்கள் குவித்திருந்தார்.