ராய்ப்பூர்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் டிசம்பர் 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது.
தொடர்ந்து 2-வது ஆட்டம் 11-ம் தேதி சண்டிகரிலும், 3-வது ஆட்டம் 14-ம் தேதி தரம்சாலாவிலும், 4-வது ஆட்டம் 17-ம் தேதி லக்னோவிலும் கடைசி மற்றும் 5-வது ஆட்டம் 19-ம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, துணை கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். ஷுப்மன் கில், கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது கழுத்து பகுதியில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரிலும் அவர், பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் ஷுப்மன் கில் டி 20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் அவர், சேர்க்கப்பட்டுள்ள போதிலும், பிசிசிஐ சிறப்பு மையம் தகுதி சான்றிதழ் வழங்கினால் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இருந்து விலகியிருந்த ஹர்திக் பாண்டியா அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரிலும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்திக் பாண்டியா தற்போது சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் விளையாடி வருகிறார். உடற்தகுதியை நிரூபித்துள்ளதால் தேசிய அணிக்கு திரும்பி உள்ளார்.
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.