இஷான் கிஷன், ஷமி
சென்னை: இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கான வேட்கை முகமது ஷமியிடம் இன்னும் இருக்கிறது என கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் கூறினார்.
துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இன்று கிழக்கு மண்டல - தென் மண்டலம் அணிகள் இன்று சென்னையில் மோதுகின்றன. கிழக்கு மண்டலம் அணி 13 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி இறுதிப் போட்டியில் நுழைந்ததில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முக்கிய பங்கு வகித்திருந்தார்.
மத்திய மண்டலம் அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இறுதிப் போட்டியிலும் அவர், எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது. இந்நிலையில் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் கூறியதாவது:
முகமது ஷமி, விளையாட்டின் ஜாம்பவானாக விளங்குகிறார். பெங்கால் அணிக்காக விளையாடத் தொடங்கியதில் இருந்தே அவர், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தித் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணிக்காகவும் அவர், மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
வயது என்பது வெறும் எண் மட்டுமே என்று நான் கருதுகிறேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்ற வேட்கையை முகமது ஷமியிடம் என்னால் பார்க்க முடிகிறது. அவர், அணியில் இருப்பது எங்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது.
ஒரு கேப்டனாக முகமது ஷமியின் முயற்சிகளைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில், ஷமி என்னிடம் வந்து விக்கெட்டுகளை வீழ்த்தத் கூடுதல் ஓவர்களைக் கேட்பார். இது கேப்டன்களுக்கு எப்போதுமே ஒருவித நம்பிக்கையைக் கொடுக்கும். அணியில் விக்கெட்டுகளை வீழ்த்தத் துடிக்கும் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது அது உற்சாகமளிக்கும்.
இந்த சீசனில் ஷமி முற்றிலும் மாறுபட்டவராக தெரிகிறார். கடந்த காலங்களில் நான் அவரைப் பார்த்த விதத்தை விட, ஆட்டத்தின் மீதான அவரது அணுகுமுறை, தீவிரம், ஆற்றல் ஆகியவை மிகவும் வித்தியாசமாக உள்ளன.
இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடாமல் இருக்கும்போது, உள்ளூர் போட்டிகளுக்கும் அதே போன்ற ஊக்கத்தை வைத்திருப்பது கடினம். அவரிடம் தற்போதும் அந்த வேட்கையும் ஊக்கமும் உள்ளது. அவர், மீண்டும் இந்திய அணியின் ஒரு பகுதியாக மாற விரும்புகிறார். இவ்வாறு இஷான் கிஷன் கூறினார்.