குவாஹாட்டி: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி சதம் பதிவு செய்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாக அமைந்துள்ளது.
குவாஹாட்டியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கார்பின் போஷ் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி சேர்க்கப்பட்டார். அவர்தான் இப்போது சதம் விளாசி அசத்தியுள்ளார்.
காயம் காரணமாக ஷுப்மன் கில் விலகியதால் இந்திய அணி ரிஷப் பந்த் தலைமையில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருந்தன. ஷுப்மன் கில், அக்சர் படேலுக்கு பதிலாக சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 81.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. செனுரன் முத்துசாமி 45 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களும், கைல் வெர்ரெய்ன் ஒரு ரன்னும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (நவ.23) தொடங்கியது. முதல் செஷனை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக அணுகினர் செனுரன் முத்துசாமியும், கைல் வெர்ரெய்னும். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக பேட் செய்தனர். அவர்களது தடுப்பாட்டம் அமர்க்களமாக இருந்தது. அவர்கள் இருவரும் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கைல் வெர்ரெய்ன் 122 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த மார்கோ யான்சன் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனையில் 192 பந்துகளில் சதம் விளாசினார் முத்துசாமி. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாகும். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டரில் 7-வது பேட்ஸ்மேனாக அவர் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. யான்சனும் அரை சதம் கடந்தார். இரண்டாம் நாள் மதிய உணவு நேர இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் எடுத்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டு செஷன் நிறைவடைந்துள்ள நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே அந்த அணி இழந்துள்ளது.