ரபாத்: ஆப்பிரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் நேற்று மொராக்கோ - செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் மொராக்கோவின் ரபாத் நகரில் உள்ள பிரின்ஸ் மவுலே அப்தெல்லா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை காண்பதற்காக மைதானத்தில் சுமார் 70 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து காயங்களுக்கு இழப்பீடாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் 2-வது நிமிடத்தில் செனகல் அணி கோல் அடித்தது. ஆனால் அது ஃபவுல் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 6-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை பாக்ஸ் பகுதிக்குள் வைத்து தடுக்க முயன்ற போது செனகல் வீரர் எல் ஹாட்ஜி மாலிக் டியூஃப், மொராக்கோ வீர் பிரஹிம் தியாஸை தள்ளிவிட்டார்.
இதனால் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செனகல் அணி வீரர்கள் பயிற்சியாளர் பபே தியாவ்வுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர். முன்னதாக இரு அணிகளின் பதிலி வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மொராக்கோ அணியின் பயிற்சியாளரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மைதானத்தின் கேலரிகளில் இருந்த செனகல் ரசிகர்களின் ஒரு பகுதியினர் களத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது ரசிகர் ஒருவர் நாற்காலியை தூக்கி எறிந்தார்.
இதையடுத்து காவல்துறையினர் ரசிகர்களை கட்டுப்படுத்தினர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 14 நிமிடங்களுக்கு பிறகு செனகல் அணி வீரர்கள் மீண்டும் களத்துக்குள் வந்தனர். அப்போது பெனால்டி வாய்ப்பில் மொராக்கோ வீரர் பிரஹிம் தியாஸ் அடித்த பந்து செனகல் கோல்கீப்பர் எட்வார்ட் மெண்டியின் கைகளுக்குள் நேராக தஞ்சம் அடைந்தது.
இதனால் செனகல் அணி கோல் வாங்குவதில் இருந்து தப்பித்தது. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தின் முடிவில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 94-வது நிமிடத்தில் செனகல் அணியின் வீரர் பேப்குயே கோல் அடித்து அசத்தினார்.
மொராக்கோ அணி கடைசி வரை போராடிய போதிலும் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் செனகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. செனகல் அணி ஆப்பிரிக்கா கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும். அந்த அணி கடந்த 2021-ம் ஆண்டும் பட்டம் வென்றிருந்தது.