முலான்பூர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் முழு உடல் தகுதியை பெற்றுள்ளனர்.
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மாவும், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவும் ஐபிஎல் தொடரின் சில ஆட்டங்களில் விளையாடவில்லை.
இந்த காயத்துக்காக இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ திறன்மிகு மையத்தில் கடந்த 2-ம் தேதி முதல் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்தனர். இவர்களது உடல்நிலையை அங்குள்ள மருத்துவக்குழு கண்காணித்து வந்தது.
பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு ரோஹித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் முழு உடற்தகுதியை அடைந்துள்ளதாக பிசிசிஐ திறன்மிகு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் வரும் 13-ம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தொடங்கும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்க உள்ளனர்.