லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதல் பந்து வீசியது. 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ. அந்த அணிக்காக அப்துல் சமாத் 36 மற்றும் மிட்செல் மார்ஷ் 35 ரன்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் நடராஜன் மற்றும் லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
142 ரன்கள் இலக்கை டெல்லி அணி விரட்டியது. 4.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி. கே.எல்.ராகுல், நிதிஷ் ராணா, பதும் நிசாங்கா, அக்சர் படேல் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் 5-வது விக்கெட்டுக்கு இணைந்த சமீர் ரிஸ்வி மற்றும் ஸ்டப்ஸ் ஜோடி, 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அது டெல்லி அணியின் வெற்றிக்கு உதவியது. இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது டெல்லி. சமீர் ரிஸ்வி, 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்டப்ஸ், 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
டெல்லி அணிக்காக சமீர் ரிஸ்வி, இம்பாக்ட் வீரராக விளையாடி இருந்தார். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றிருந்தார். 5 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும்.