பிரப்சிம்ரன் சிங்
பெங்களூரு: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பஞ்சாப், விதர்பா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் நேற்று பெங்களூரு பிசிசிஐ சிறப்பு மையத்தில் உள்ள ஆடுகளத்தில் பஞ்சாப் - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 345 ரன்கள் குவித்தது.
கேப்டன் பிரப்சிம்ரன் சிங் 86 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 88 ரன்களும், அன்மோல்பிரீத் சிங் 62 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் விளாசினர். நேஹல் வதேரா 56, ஹர்னூர் சிங் 51 ரன்கள் சேர்த்தனர்.
மத்திய பிரதேச அணி தரப்பில் திரிபுரேஷ் சிங், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 346 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மத்திய பிரதேச அணி 31.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 38, திரிபுரேஷ் சிங் 31, ஷுபம் சர்மா 24, ஹிமான்ஷு மந்த்ரி 18 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி சார்பில் சன்வீர் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார். குர்னூர் பிரார், கிரிஷ் பகத், ரமன்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகனாக பிரப்சிம்ரன் சிங் தேர்வானார்.
டெல்லி அணி தோல்வி: மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் விதர்பா - டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த விதர்பா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 73 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். அதர்வா டைடு 62, துருவ் ஷோரே 49, ரவிகுமார் சமர்த் 23 ரன்கள் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி, பிரின்ஸ் யாதவ், நிதிஷ் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
301 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 45.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 66 ரன்கள் சேர்த்தார். விதர்பா அணி சார்பில் நாச்சிகேத் பூதே 4, ஹர்ஷ் துபே 3, பிரஃபுல் ஹின்ஜ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அணி அரை இறுதிக்கு முன்னேறியது.