சென்னை: யூனியன் சைக்லிஸ்ட் இண்டர்நேஷனல் 2.2 பஜாஜ் புனே கிராண்ட் டூர் 2026 சைக்கிள் பந்தயம் வரும் ஜனவரி 19 முதல் 23-ம் தேதி வரை புனேவில் நடைபெறுகிறது.
ஆடவருக்கான எலைட் சாலை சைக்கிள் பந்தயமான இதில் உலகம் முழுவதிலும் இருந்து வீரர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். 437 கிலோ மீட்டரை உள்ளடக்கிய இந்த சைக்கிள் பந்தயம் நான்கு கட்டங்களைக் கொண்டது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 28 அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 2 அணிகள் களமிறங்க உள்ளன.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டிராபி சுற்றுப்பயணம் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று டிராபி சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேக்நாத் ரெட்டி, மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் தலைவர் எம்.சுதாகர், போட்டியின் போட்டித் தொழில்நுட்ப இயக்குநர் பினாகி பைசாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.