சல்மான் அலி ஆகா

 
விளையாட்டு

இனி ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம்... - பாக். வீரர் சல்மான் அலி ஆகா முடிவு

ஆர்.முத்துக்குமார்

பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன் சல்மான் அலி ஆகா, டி20 கிரிக்கெட்டுக்கு சற்று இடைவெளி கொடுத்து விட்டு 2027 உலகக் கோப்பைக்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்ளலாமா என்பதைப் பரிசீலித்து வருகிறார்.

“உலகக் கோப்பைக்கு இன்னும் நீண்ட தொலைவு உள்ளது. ஆனாலும், ஒருவர் தனது பணிச்சுமையை நிர்வகிப்பது குறித்து சிந்திக்கத்தான் வேண்டும். உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராவதற்கு இந்த ஓய்வு உதவும் என்று நான் உணர்ந்தால், அதைச் செய்வேன்” என்று ஆகா செய்தியாளர்களிடம் கூறினார்.

தன்னைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைதான் மிக முக்கியமான நிகழ்வு என்றும் பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவதற்காக, தேவைப்பட்டால் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு தயாராகத் தொடங்குவேன் என்றும் அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

சல்மான் கடந்த ஒரு வருடமாக தேசிய டி20 அணியின் கேப்டனாக இருந்து வருகிறார், ஆனால் இந்த வடிவத்தில் அவர் சமீபகாலமாக தடுமாறி வருவதால், அவரது கேப்டன் பதவி குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

பேட்டிங் ஆல்-ரவுண்டர் என்ற ஹோதாவில் ஆடிவரும் சல்மான் ஆகா உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்தும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அவரது அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

இருப்பினும், கடந்த மாதம் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடரில், அவர் 106, 64 மற்றும் 5 ரன்கள் எடுத்திருந்தார்.

மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் பற்றிப் பேசுகையில், புதிய திறமைகளைக் கண்டறிய அது ஒரு நல்ல தளமாக இருந்தாலும், அந்த லீக்-லிருந்து இளம் வீரர்களை நேரடியாக சர்வதேச கிரிக்கெட்டுக்குத் தேர்ந்தெடுப்பதை தான் ஆதரிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

“கடந்த காலங்களில், சில வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகளில் காட்டிய திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சர்வதேசப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர்மட்டத்தில் வெற்றி பெறாததற்குப் பல உதாரணங்கள் உள்ளன” என்றார் சல்மான் ஆகா.

SCROLL FOR NEXT