கண்டி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 குரூப்-2 ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக சதம் விளாசினார் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஹிப்சதா ஃபர்ஹான். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இந்த தொடரில் இன்னிங்ஸில் 6 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 383 ரன்கள் எடுத்துள்ளார் சஹிப்சதா ஃபர்ஹான். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே பதிப்பில் (சிங்கிள் எடிஷன்) அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
முன்னதாக, இந்திய வீரர்கள் விராட் கோலி, கடந்த 2014 டி20 உலகக் கோப்பை தொடரில் 319 ரன்கள் சேர்த்தது சாதனையாக இருந்தது. அடுத்தடுத்த இடங்களில் தில்ஷன் - 317 ரன்கள் (2009), பாபர் அஸம் - 303 ரன்கள் (2021), ஜெயவர்த்தனே - 302 ரன்கள் (2010) ஆகியோர் உள்ளனர். இவர்கள் ஐவரும் ஆசியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்த தொடரில் இரண்டு சதங்களை பதிவு செய்துள்ளார் ஃபர்ஹான். இதன் மூலம் ஒரே டி20 உலகக் கோப்பை பதிப்பில் இரண்டு சதங்களை விளாசியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதேபோல டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிலுக்கு அடுத்ததாக இரண்டு சதங்களை விளாசிய வீரராக ஃபர்ஹான் அறியப்படுகிறார்.
இலங்கை உடனான சூப்பர் 8 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. இதில் ஃபர்ஹான், 60 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். ஃபகர் ஸாமான், 42 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை.
இந்தப் போட்டியில் ஃபர்ஹான் மற்றும் ஸாமான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தனர். இது டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் இலங்கையை 147 அல்லது அதற்கும் குறைவான ரன்களில் கட்டுப்படுத்தினால் அரையிறுதி ஆட்டத்துக்கு பாகிஸ்தான் முன்னேறும். அப்படி இல்லையென்றால் நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.