கொழும்பு: வேகப்பந்து வீச்சாளர் நூவன் துஷாரா, ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லா சான்றிதழை வழங்காததற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நூவன் துஷாராவை ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அவர், உடற்தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாததால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழை வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்தது.
இதை எதிர்த்து நூவன் துஷாரா கொழும்பு மாவட்ட நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான விசாரணையின் போது நூவன் துஷாராவின் வழக்கறிஞர், ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டதால் வழக்கைத் திரும்பப் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் துஷாரா மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது.