திருவனந்தபுரம்: இந்திய மகளிர் அணிக்கு அடுத்த 6 மாதங்கள் முக்கியமான காலமாக அமைந்துள்ளது என்று அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். அமன்ஜோத் கவுர் 21, அருந்ததி ரெட்டி 27 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதன் மூலம் இந்தத் தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகியாகவும், ஷபாலி வர்மா தொடர்நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளோம்.
2025-ல் 50 ஓவர் உலகக் கோப்பையைக் கைப்பற்றினோம். அடுத்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை பிரிட்டனில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக நாங்கள் மிகச் சிறந்த முறையில் தயாராக உள்ளோம். எனவே, அடுத்த 6 மாத காலம் இந்திய மகளிர் அணிக்கு மிகவும் முக்கியமான காலமாக அமைந்துள்ளது.
இந்த 6 மாத காலத்தில் சிறந்த முறையில் பயிற்சி பெறுவோம். 2025-ம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு சிறந்ததாக அமைந்தது. அதைப் போலவே 2026-ம் ஆண்டும் மிகச்சிறப்பாக அமையும் என எண்ணுகிறோம். அடுத்து வரவுள்ள 6 மாத காலத்தில் பல்வேறு போட்டிகளில் நாங்கள் பங்கேற்கவுள்ளோம்.
இது டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான சிறந்த பயிற்சியாக அமையும். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி விட்டு உடனடியாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிக்கு எங்களை மாற்றிக் கொள்வது எளிதான விஷயம் கிடையாது. ஆனால், இலங்கைக்கு எதிரான தொடரில் அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனையும் உற்சாகத்துடன் விளையாடினர்.
அதுமட்டுமல்லாமல் விரைவில் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) போட்டியும் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவது மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுக்கும். அது டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு உதவும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.