பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் உடன் அர்ஷ்தீப் சிங்
சென்னை: கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தோம். இந்த முறை எங்கள் அணியினர் கோப்பை வெல்வதை இலக்காக கொண்டுள்ளனர் என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
வரும் 28-ம் தேதி ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த சீசனை முன்னிட்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
“எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சவால்களை நான் விரும்புவேன். முக்கிய விஷயம் என்னவென்றால் நாங்கள் களம் காணும் போதெல்லாம் வெற்றி வேண்டும். எனது பார்வை கோப்பை மீது உள்ளது. கோப்பை வெல்வதே எங்கள் அணியின் இலக்கு” என்று அவர் தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்றாக பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளது. கடந்த 2014 மற்றும் 2025 சீசன்களில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.