விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி? - மான்டி பனேசர் பரிந்துரை

வேட்டையன்

சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரி சரியான தேர்வாக இருப்பார் என அந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, தொடரை 3-0 என தக்கவைத்துள்ளது. இந்த தொடரின் 4-வது போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உள்ள பிரண்டன் மெக்கல்லமை நீக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர், தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் பொறுப்பேற்றார். அது முதல் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இங்கிலாந்து அணி 25 வெற்றி மற்றும் 17 தோல்விகளை பெற்றுள்ளது. 2023 மற்றும் 2025-ம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அந்த அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்துடனான மெக்கல்லம் போட்டுள்ள ஒப்பந்தம் 2027-ம் ஆண்டு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

“ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எப்படி என்பதை அறிந்த ஒருவர் குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனம் மற்றும் அதன் யுக்தியை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்ற யுக்தியை அறிந்த ஒருவர் வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கலாம் என நான் கருதுகிறேன்” என பனேசர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்ட போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியத் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT