

வண்டலூர், கிண்டி பூங்காக்கள், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மற்றும் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் ஜன.15 முதல் 17 வரை 3 நாட்களும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. நோய்த்தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
காணும் பொங்கல்
இதைத்தொடர்ந்து, பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள், சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்கா மற்றும் மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதால், கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக கரோனா பரவலை தடுக்கும் வகையில், மேற்கண்ட அனைத்து இடங்களிலும் ஜன.15, 16 மற்றும் 17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.