புதுடெல்லி: இலங்கையுடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. முழங்காலில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அவர் இந்தத் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக வரும் 7-ம் தேதி, இலங்கை லெவனுடனான 3 நாள் பயிற்சிப் போட்டியிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் வரும் 15-ம் தேதி தொடங்கவுள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி கொழும்பிலுள்ள சிங்களீஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆனால் அவரது முழங்காலில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அவர் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது.
அவர் தொடரிலிருந்து விலகுவது தொடர்பாக விரைவில் பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது. தற்போது பெங்களூருவிலுள்ள திறன்மிகு மையத்தில் ஜஸ்பிரீத் பும்ரா சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் உடலியக்க நிபுணர்களும் அவருக்கு போதிய பயிற்சியை வழங்கி வருகின்றனர்.