நாக்பூர்: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் கூறியதாவது:
இஷான் கிஷன் டி20 உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருப்பதால் அவர், நியூஸிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் 3-வது இடத்தில் பேட்டிங் செய்வார். அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது எங்கள் பொறுப்பு.
இஷான் கிஷன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் வாயிலாக அவர், மீண்டும் தேசிய அணிக்குள் வந்துள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்கு இஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர், ஸ்ரேயஸ் ஐயருக்கு முன்னதாக களமிறங்கி விளையாடுவதற்கு தகுதியானவர். துரதிருஷ்டவசமாக திலக் வர்மா இல்லாததால் அந்த இடத்துக்கு இஷான் கிஷனே சிறந்த வீரராக இருப்பார். நான் 3-வது இடத்திலும், 4-வது இடத்திலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளேன். 4-வது இடத்தில் எனது புள்ளிவிவரங்கள் சற்று சிறப்பாகவே உள்ளன.
இஷான் கிஷனும், திலக் வர்மாவும் 3-வது இடத்தில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். எனினும் நாங்கள் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடும் திறனை கொண்டுள்ளோம்.
சமீபகாலமாக நான் அதிகளவில் ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால் என் அடையாளத்தை என்னால் மாற்ற முடியாது. கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களாக நான் செய்து வருவதைத் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன், அதனால் எனக்கு நிறைய வெற்றி கிடைத்துள்ளது.
சிறந்த செயல்திறன் வெளிப்பட்டால் அதை எடுத்துக்கொள்வேன், இல்லையென்றால், மீண்டும் கடினமாக பயிற்சி மேற்கொள்வேன்.
நான் எப்போதும் போலவே வலைகளில் பேட்டிங் செய்து வருகிறேன். நான் டேபிள் டென்னிஸ் அல்லது டென்னிஸ் போன்ற தனி விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தால், எனது ஃபார்மைப் பற்றி கவலைப்பட்டிருப்பேன். ஆனால் கிரிக்கெட் குழு விளையாட்டு, எனது அணி சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதே எனது முதல் பொறுப்பு.
அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவேன், அணியின் வெற்றிக்கு என்னால் பங்களிக்க முடிந்தால் சிறப்பாக கருதுவேன். ஆனால் அது நடக்கவில்லையென்றால் பரவாயில்லை. அணியில் உள்ள மற்ற 14 வீரர்களையும் பார்க்க வேண்டும், தனிப்பட்ட மைல்கற்களைப் பார்க்க இடமில்லை.இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.