முலான்பூர்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்தவி மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மஹாராஜ், அன்ரிச் நோர்க்கியா ஆகியோர் நீக்கப்பட்டு ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ஓட்னீல் பார்ட்மேன், ஜார்ஜ் லின்டே ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான குயிண்டன் டி காக் 46 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் விளாசினார். அர்ஷ்தீப் சிங் (3), அக்சர் படேல் (2), ஜஸ்பிரீத் பும்ரா (1), ஹர்திக் பாண்டியா (1) ஆகியோரது ஓவர்களில் டி காக் சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.
ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 8, கேப்டன் எய்டன் மார்க்ரம் 29, டெவால்ட் பிரேவிஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்ட ஓவர்களில் டோனோவன் ஃபெரீரா 16 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்களும், டேவிட் மில்லர் 12 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் விளாசினர்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களை வீசி 29 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்களை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 54 ரன்களையும், ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 45 ரன்களையும் தாரை வார்த்தனர். ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 34 ரன்களை வழங்கினார். அக்சர் படேல் 3 ஓவர்களை வீசி 27 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
11-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 7 வைடுகளுடன் 13 பந்துகளை வீசி 18 ரன்களை வாரி வழங்கினார். இதன் மூலம் சர்வதேச டி 20 போட்டியில் ஒரு ஓவரில் அதிக பந்துகள் வீசிய ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக்கின் மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் சமன் செய்தார்.
நவீன் உல் ஹக் 2024-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 13 பந்துகளை வீசியிருந்தார்.
214 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் ஓபனிங் வீரர்கள் அபிஷேக் சர்மா 17 ரன்கள், ஷுப்மன் கில் 0 என தொடக்கத்திலேயே இந்திய தடுமாறியது. அக்சர் படேல் 21 ரன்களுடன் வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து இறங்கிய திலக் வர்மா அரை சதம் கடந்து 62 ரன்களுடன் அணியின் ஸ்கொரை உயர்த்தினார். கடந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வழங்கிய ஹர்திக் பாண்டியா இந்த முறை 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஜிதேஷ் சர்மா 27, ஷிவம் துபே 1, அர்ஷ்தீப் சிங் 4, வருண் சக்ரவர்த்தி 0, பும்ரா 0 என இந்திய அணி 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.