ஆம்ஸ்டல்வீன்: நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது இந்திய ஹாக்கி அணி.
ஆடவர் ஹாக்கியில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டுமென்ற அழுத்தத்துடன் இந்தியா விளையாடியது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி புதன்கிழமை (ஆக.19) நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் இந்த தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியா இப்போது முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது.
இந்த ஆட்டத்தின் முதல் 15 நிமிட ஆட்டத்தில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது 15 நிமிடத்தின் தொடக்கத்தில் மேலும் ஒரு கோல் பதிவு செய்து 3-0 என முன்னிலையை கூட்டியது. இதே இரண்டாவது 15 நிமிட ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் கோலை பதிவு செய்தது. தொடர்ந்து இந்த காலிறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலா 1 கோல்கள் பதிவு செய்தன. இந்தியா 4-2 என முன்னிலையில் இருந்தது.
மூன்றாவது 15 நிமிட ஆட்டத்தில் இந்தியா ஒரு கோலும், நான்காவது 15 நிமிட ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு கோலும் பதிவு செய்தது. ஆட்டத்தின் 60 நிமிட முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் முன்கள வீரர் அபிஷேக் ஆகியோர் தலா இரண்டு கோல்கள் பதிவு செய்தனர். நடுகள வீரர் ஹர்திக் சிங் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி இருந்தார்.
இந்திய அணி அடுத்த சுற்றில் இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜெண்டினா/நியூஸிலாந்து அணியை சந்திக்க உள்ளது. இந்த சுற்றில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.