ராய்ப்பூர்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சீனியர் பேட்ஸ்மேனான விராட் கோலி 135 ரன்களும், ரோஹித் சர்மா 57 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தனர். இதேபோன்று பந்து வீச்சில் தொடக்க ஓவர்களில் ஹர்ஷித் ராணாவும், நடு ஓவர்களில் குல்தீப் யாதவும் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.
2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், கோலியும் ரோஹித்தும் தங்கள் உடற்தகுதி மற்றும் ஃபார்மை நிரூபிக்க ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் அவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அதே வேளையில் அவர்கள் இருவரை மட்டுமே அணி நம்பியிருப்பதும் ஒரு வகையில் நெருக்கடியும் உருவாக்கக்கூடும்.
கடந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர், சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். இதேபோன்று வாஷிங்டன் சுந்தரும் கவனம் ஈர்க்கத் தவறினார். இவர்கள் இருவரும் தங்களது மந்தமான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் குவிப்பு வேகத்துக்கு நடு ஓவர்களில் சற்று தடையை ஏற்படுத்தினர்.
மேலும் பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல் தொடக்கத்தில் மந்தமாக விளையாடினாலும் கடைசி பவர்பிளேவில் சற்று விரைவாக ரன்கள் சேர்த்து பலம் சேர்த்தார். கேப்டனாக அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்படும் ஹர்ஷித் ராணா அதன் பின்னர் ரன்களை அதிக அளவில் விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. இதனால் அவர், ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தினால் அணியின் பலம் கூடுதல் வலுப்பெறும். சுழலில் குல்தீப் யாதவ் 68 ரன்களை வழங்கிய போதிலும் தேவையான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியை கட்டுப்படுத்த முடிந்திருந்தது.
தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கேப்டன் தெம்பா பவுமா, கேசவ் மஹாராஜ் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும். ராஞ்சி போட்டியில் 39 பந்துகளில் 70 ரன்கள் விளாசிய மார்கோ யான்சன், 72 ரன்கள் சேர்த்த மேத்யூ ப்ரீட்ஸ்கே, இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடி 67 ரன்கள் விளாசிய கார்பின் போஷ் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ஆடுகளம் எப்படி?: 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இதற்கு முன்னர் ஒரே ஒரு சர்வதேச நாள் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தது. அப்போது வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 109 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 30 ஓவர்களை மீதம் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.