இம்ரான் கான் மகன்கள் சுலைமான், காசிம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் மகன்களை ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனல் நேர்காணல் செய்ததையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் எதிர்ப்பைப் புகாராக பதிவு செய்துள்ளது.
லார்ட்ஸ் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தின் போது உணவு இடைவேளை தருணத்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இம்ரான் மகன்களின் பேட்டியை ஒளிபரப்பு செய்தது. மைக் ஆதர்டன், இம்ரான் கானின் மகன்கள் சுலைமான், காசிம் கானை நேர்காணல் செய்தார்.
நேர்காணலில் அவர்கள் சொன்னது என்ன?
அதில் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தங்கள் தந்தையின் உடல்நிலை குறித்து அவர்கள் கவலை தெரிவித்ததுடன், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தனர்.
லார்ட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இடைவேளையின்போது இந்த நேர்காணலை ஒளிபரப்ப ஸ்கை ஸ்போர்ட்ஸ் தயாரானது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. நேர்காணல் ஒளிபரப்பப்பட்டால், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் களத்திற்கு வரமாட்டார்கள் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒளிபரப்பு சற்று தாமதிக்கப்பட்டாலும், இறுதியில் 18 நிமிட நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. பாகிஸ்தானில் தொடரை ஒளிபரப்பி வரும் பிடிவி-யில் இந்த நேர்காணல் ஒளிபரப்பப்படவில்லை.
இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என அவரது மகன்கள் வலியுறுத்தி வருகின்றனர். இம்ரானை இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு பதிலாக அரசு மருத்துவமனையான பிம்ஸ்-க்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என அவரது சகோதரிகளும் மகன்களும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தனது சொந்த மருத்துவரை சந்திக்க இம்ரானுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதற்கிடையே, ஆதர்டன் உள்ளிட்ட 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள், இம்ரான் கானுக்கு சிறையில் உரிய மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளின் முன்னாள் கேப்டன்களும் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்கை ஸ்போர்ட்ஸ் நேர்காணல் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திலும் புகார் அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எங்களுக்கு எதுவும் தெரியாது
“அந்த நேர்காணல் குறித்து எனக்கும், எங்கள் அணி வீரர்களுக்கும் எதுவும் தெரியாது. எங்களது கவனம் ஆட்டத்தின் மீது உள்ளது. முதல் நாள் ஆட்ட மதிய உணவு இடைவேளையின் போது நாங்கள் உணவு சாப்பிட்டோம்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.