ஹராரே: இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டி 0 போட்டி நாளை (23-ம் தேதி) ஹராரேவில் நடைபெறுகிறது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி 20 தொடரை இழந்த நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை விளையாட உள்ளது.
ஜிம்பாப்வே அணி கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதைத் தொடர்ந்து இலங்கை, வங்கதேச அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடர்களிலும் ஜிம்பாப்வே அணி வெற்றி கண்டிருந்தது. இதனால் இந்திய அணிக்கு எதிரான டி 20 தொடரை ஜிம்பாப்வே அணி மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் குறித்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா கூறியதாவது: இந்தத் தொடரில் இரு நாடுகளுக்கும் வெற்றி பெறச்சமமான வாய்ப்புகள் இருக்கும். சமீபகாலமாக நாங்கள் மிகவும் சீரான மற்றும் விறுவிறுப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இதனால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
வெற்றி தோல்வியைப் பொறுத்தவரை, இந்தத் தொடரைக் கைப்பற்ற இரு அணிகளுக்குமே சமமான வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணி தற்போது வீரர்கள் மாற்றத்துக்கான கட்டத்தில் உள்ளது. அதேபோல் ஜிம்பாப்வே அணியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் நடைபெற உள்ள டி 20 தொடர் ஒருதரப்பாக இருக்கும் என நான் கருதவில்லை.
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயதே ஆகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலேயே அவர், மீது விமர்சனங்களை வைப்பது நியாயமாக இருக்காது. வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றி நிறைய சீனியர் வீரர்கள் உள்ளனர். அவர், சரியாக வழிநடத்தப்பட்டால், அவரால் கண்டிப்பாக ஒரு தலைமுறைக்கான வீரராக உருவாக முடியும். இவ்வாறு சிகந்தர் ராசா கூறினார்.