மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கு எங்கள் அணி பந்து வீச்சாளர்களை குறை கூறமாட்டேன் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் மும்பை அணி நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தியது.
அந்த அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹெய்ன்ரிச் கிளாசென், சலில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஹைதராபாத் அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இது மும்பை அணிக்கு 6-வது தோல்வியாக அமைந்தது. இந்நிலையில், மும்பை அணியின் தொடர் தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்தோம்.
ரியான் ரிக்கெல்டன் அபாரமான இன்னிங்ஸை விளையாடி சதமடித்தார். ஸ்கோர் போர்டில் 243 ரன்கள் என்று இருந்தபோது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். இந்தத் தோல்விக்கு பனிப்பொழிவு ஒரு பெரிய பங்கு வகித்ததாக நான் நினைக்கவில்லை. ஹைதராபாத் வீரர்கள் சில நல்ல ஷாட்களை விளையாடினர்.
நாங்கள் மோசமாக பந்து வீசினோம். 244 என்ற இலக்கை எதிரணியினர் எட்ட விட முடியாமல் எங்கள் பந்துவீச்சாளர்கள் தடுப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் எங்களது பந்துவீச்சுத் திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த முடியவில்லை.அவர்கள் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அப்படிப்பட்ட ஒரு சீசனாகத்தான் இருக்கிறது.
உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது, அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், அது நிச்சயம் உங்களை பாதிக்கும். இந்த சீசனில், எங்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. நான் எனது பந்துவீச்சாளர்களைக் குறை கூற மாட்டேன். ஒட்டுமொத்தமாக, மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கமாக செய்வதை இன்று எங்களால் செய்ய முடியவில்லை. இவ்வாறு ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.