ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிளெசிங் முசரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) ஒப்பந்தத்தைக் கைவிட்டிருந்தார். கடந்த மாதம் நடந்த பிஎஸ்எல் ஏலத்தில் முசரபானியை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இருப்பினும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஷமர் ஜோசப்புக்கு பதிலாக இஸ்லாமாபாத் யுனைடெட் அணியால் முசரபானி நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார் முசரபானி. இந்நிலையில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடனான தனது ஒப்பந்தத்தை மீறியுள்ள முசரபானி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா மோதல்: 5 டி20 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று (15-ம் தேதி) மவுன்ட்மவுங்கனி நகரில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெறும் போட்டியை சோனி சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை நியூஸிலாந்து தோற்கடித்து இருந்தது. லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று ஆகியவற்றில் அபாரமாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியை அரை இறுதியில் நியூஸிலாந்து அணி எளிதாக பந்தாடியது. இந்த தோல்விக்கு தற்போதைய இருதரப்பு தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இரு அணிகளிலும் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி கேசவ் மகாராஜ் தலைமையில் களமிறங்குகிறது.
அரை இறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி: இந்தியன் வெல்ஸ் அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடியானது பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்க்னெக், மொனாக்கோவின் வாலண்டைன் வச்செரோட் ஜோடியுடன் மோதியது. இதில் யுகி பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி 5-7, 7-6(7), 5-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
கால் இறுதியில் தருண் தோல்வி: சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 43-ம் நிலை வீரரான இந்தியாவின் தருண் மனேப்பள்ளி, 51-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்குடன் மோதினார். ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தருண் மனேப்பள்ளி 19-21, 21-19, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
கால்பந்தில் சுங்கவரித்துறை வெற்றி: சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சுங்கவரித்துறை அணி - தமிழ்நாடு காவல் துறை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை சுங்கவரித்துறை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 68-வது நிமிடத்தில் நந்தா கோல் அடித்தார். சிறந்த வீரராக சுங்கவரித்துறை அணியைச் சேர்ந்த சாய்ராம் தேர்வானார்.
குத்துச்சண்டை போட்டி இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்: ஃபியூச்சர்ஸ் கோப்பை தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிருக்கான 51 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சந்திரிகா, மொராக்கோவின் ரிஹாப் ஹம்தூனை வீழ்த்தி இறுதி சுற்றில் நுழைந்தார். 48 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் கன்ஜன் 5-0 என்ற கணக்கில் வட கொரியாவின் யூ கியோங்கை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
54 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜாய் தேவி, மெக்சிகோவின் சோபியா ரமிரேஸை வீழ்த்தி இறுதி சுற்றில் நுழைந்தார். ஆடவருக்கான 50 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அம்பேகர் மீட்டி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துகானி யார்கின்ஜோனோவை வீழ்தினார். அதேவேளையில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ராதாமணி லாங்ஜம் 2-3 என்ற கணக்கில் உக்ரைனின் யெவன்ஹெலினா பெட்ருக்கிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.