கொல்கத்தா: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.
இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி காலே சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஃபர்வீஸ் மஹரூஃப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது: பழைய பந்தில் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்யும் திறன் கொண்ட ஜஸ்பிரீத் பும்ரா, இலங்கை டெஸ்ட் தொடரில் இல்லாதது இந்திய அணிக்குப் மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
எனினும் குர்னூர் பிரார் இந்திய அணியின் முக்கிய காரணியாக இருக்க முடியும். அவரிடம் பவுன்ஸ் பந்துவீச்சு, வேகம் மற்றும் போராடும் குணம் ஆகியவை உள்ளன. அவரால் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்க முடியும்.
பயிற்சி போட்டியில் அவர், வீசிய சில பந்துகள் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள பேட்டர்களுக்கு மிகவும் அசவுகரியத்தை ஏற்படுத்தின. அதுமட்டுமின்றி உடலை குறிவைத்தும் குர்னூர் பிரார் பந்துகளை வீசுகிறார்.
பேட்ஸ்மேனின் உத்வேகத்தை குலைக்க நினைக்கும் போது, குறுகிய இடைவெளிகளில் வேகமான ஓவர்களில் குர்னூர் பிரார் ஆபத்தான ஆயுதமாக இருப்பார். காலே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார் அல்லது சரண்ஷ் ஜெயின் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக்கூடும்.
நான் இலங்கை அணியின் வீரர்கள் அறையில் இருந்தால், ரிஷப் பந்த்தை நினைத்து மிகவும் கவலைப்படுவேன். அவர், அரை மணி நேரத்திலோ அல்லது 45 நிமிடங்களிலோ போட்டியின் போக்கை முற்றிலும் மாற்றக்கூடிய வீரர்.
இலங்கை அணி நிச்சயமாக இரண்டு முதன்மை சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கும்.
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக சுழற்பந்துவீச்சாளர்கள்தான் இருப்பார்கள். பிரபாத் ஜெயசூரியா இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அவர்தான் இலங்கையின் பிரதான சுழல் ஆயுதம்.
காலே மைதானத்தில் பிரபாத் ஜெயசூரியா கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை காரணமாக அவரை நாங்கள் ‘காலேவின் ராஜா’ என்று அழைப்போம்.
காலே மைதானத்தில் காற்று முக்கிய காரணியாக இருக்கும். ஏனெனில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தை காற்றில் மிதக்கவிட்டு விலகச் செய்வார்கள். இந்த வகையில், இந்த மைதானத்தில் காற்றைப் பயன்படுத்தி எப்படிப் பந்துவீசுவது என்பது பிரபாத் ஜெயசூரியாவுக்கு நன்றாகத் தெரியும்.
காலே மைதானத்தில் பக்கவாட்டில் காற்று வீசும் என்பதால், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அந்தச் சூழலுக்கு விரைவாகப் பழகிக்கொள்ள வேண்டும். அவர்கள் அந்தக்காற்றுக்கு எவ்வளவு விரைவாகத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. இவ்வாறு ஃபர்வீஸ் மஹரூஃப் கூறினார்.