பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தேல்.
பல்லேகலே: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது அனைத்து லீக் ஆட்டங்களையும் இந்தியாவில் விளையாடி இருந்த நிலையில் தற்போது சூப்பர் 8 ஆட்டங்களை இலங்கையில் விளையாட உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கை மண்ணில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரை ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றிருந்தது.
இதனால் சுழலுக்கு சாதகமான இலங்கை ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி எந்தவித நெருக்கடியும் இன்றி சிறப்பாக செயல்பட முயற்சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 2 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் தடுமாறியே வெற்றி கண்டிருந்தது.
மேற்கு இந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்திருந்த இங்கிலாந்து அணி, கத்துக்குட்டியான நேபாளத்திடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடியே வெற்றி பெற்றிருந்தது. ஸ்காட்லாந்து, இத்தாலி அணிகளுக்கு எதிரான ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கப் போக்குடன் வெற்றி பெறவில்லை.
தசன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்திருந்தது. மேலும் அயர்லாந்து, ஓமன் அணிகளையும் வீழ்த்தியிருந்தது. அதேவேளையில்கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி கண்டிருந்தது.
தொடக்க வீரரான பதும் நிசங்கா ஆஸ்திரேலிய அணிக்கு சதம் அடித்து அசத்தியிருந்தார். மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அரை சதமும் எடுத்திருந்தார். நடப்பு தொடரில் 199 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒருசிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
இதேபோன்று குஷால் மெண்டிஸும் 3 அரை சதங்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு துறைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். பந்துவீச்சில் தீக்சனா, தில்ஷான் மதுஷங்கா பலம் சேர்க்கக்கூடும். கடந்த ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த துஷ்மந்தா சமீரா களமிறங்கக்கூடும்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஜேக்கப் பெத்தேல் மட்டுமே சீராக ரன்கள் சேர்த்துள்ளார். அவர், 4 ஆட்டங்களில் ஒரு அரைசதத்துடன் 143 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் ஹாரி புரூக், அனுபவமிக்க ஜாஸ் பட்லர் ஆகியோரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை.
பந்துவீச்சை பொறுத்தவரையில் சுழலில் ஆதில் ரஷித், லியாம் டாவ்சன், வில் ஜேக்ஸ் ஆகியோர் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக்கூடும். அதேவேளையில் வேகப்பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் நெருக்கடி கொடுக்கக்கூடும். இதற்கிடையே கண்டியில் இன்று பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டியும் பாதிக்கப்படக்கூடும்.