விளையாட்டு

லார்ட்ஸ் டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 61, ஜோர்டான் காக்ஸ் 55 ரன்கள் சேர்த்தனர்.

அதேவேளையில் பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அஸான் அவாய்ஸ் 46, சவுத் ஷகீல் 16 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆலி ராபின்சன் 4, ஜோப்ரா ஆர்ச்சர் 3, ஜோஷ் டங் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 22 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் 1, ஜோர்டான் காக்ஸ் 11, கேப்டன் ஜோ ரூட் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். எமிலியோ கே 30, ஹாரி புரூக் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

261 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணி நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பின்னரே ஆட்டம் தொடங்கப்பட்டது. எமிலியோ கே 31 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

35 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் 30, டான் லாரன்ஸ் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அப்போது இங்கிலாந்து அணி 304 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், ஹாரி புரூக் 34 ரன்களில் வெளியேறினார். ஜேமி ஸ்மித் 7, அட்கின்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 357 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட காரணங்களால் மூன்றாம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT