தேவ்தத் படிக்கல்
காலே: இலங்கை - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே வீரர்களே தற்போதும் இடம் பெற்றிருந்தனர். சாய் சுதர்சனுக்கு பதிலாக மட்டும் தேவ்தத் படிக்கல் களமிறக்கப்பட்டார். மற்றபடி மாற்றங்கள் ஏதும் இல்லை.
இலங்கை அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கேஷர நுவந்தா அறிமுக வீரராக இடம் பெற்றார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி 11 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் இலங்கை அணியின் பந்துவீச்சை சிரமம் இல்லாமல் எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 27 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 32, தேவ்தத் படிக்கல் 35 ரன்கள் சேர்த்து இருந்தனர்.
மதிய உணவு இடைவேளையின் போது மழை பெய்தது. இதனால் உணவு இடைவேளைக்கு பின்னர் திட்டமிட்டபடி ஆட்டத்தை தொடங்குவதில் சிக்கல் எழுந்தது. மழை நின்ற பின்னர் சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. தேவ்தத் படிக்கல் 81 பந்துகளிலும், கே.எல்.ராகுல் 127 பந்துகளிலும் அரை சதம் கடந்தனர்.
நிதானமாக பேட் செய்த கே.எல்.ராகுல் 162 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். தேநீர் இடைவேளையில் இந்திய அணியின் ஸ்கோர் 53 ஓவர்களில் 197 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் ஜோடி 255 பந்துகளை எதிர்கொண்டு 150* ரன்கள் சேர்த்திருந்தது.
இதையடுத்து கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இது அவரது முதல் சதமாக அமைந்தது.
ஷுப்மன் கில் 28 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் பிரபாத் ஜெயசூரியா பந்தை மிட் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்ற போது லகிரு உதராவிடம் கேட்ச் ஆனது. 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 39 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ரிஷப் பந்த் களமிறங்கினார்.
இந்திய அணி 63 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த் ஜோடி சீராக ரன்கள் சேர்த்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது.
தேவ்தத் படிக்கல் 178 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 131 ரன்களும், ரிஷப் பந்த் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இந்திய அணி.
15 நிமிடங்கள் முன்னதாக..
காலே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக 17 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டது. இதனால் இன்றைய 2-வது நாள் ஆட்டம் 15 நிமிடங்களுக்கு முன்னதாக காலை 9.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல் காயம்
காலே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்திருந்த போது தசைப்பிடிப்பு மற்றும் வலது கையில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். தேநீர் இடைவேளைக்கு முன்னதாக தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட கே.ராகுலுக்கு மைதானத்தில் உடலியக்க சிகிச்சையாளர் முதலுதவி அளித்தார். ஆனால் அதற்கு பலன் இல்லாததால் கே.எல்.ராகுல் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.