2026 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு சில விஷயங்கள் பாசிட்டிவ் ஆக இருந்தாலும் மொத்தமாக நெகெட்டிவ் ஆகி பிளே ஆப் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இந்நிலையில் ‘நாங்கள் இளம் அணிதான் என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனர்’ என்று தோல்விகளுக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வேதனை தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி வரை சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு ஓரளவுக்கு இருந்தது, ஆனால் 89 ரன்கள் தோல்வி கதவை அடைத்தது. இந்த சீசனில் 14 போட்டிகளில் 8 வெற்றிகள், 6 தோல்விகளுடன் சிஎஸ்கே வெளியேறியுள்ளது.
இந்நிலையில் தங்கள் அணி ‘மாற்றத்தில்’ இருக்கிறது என்றும் இந்தக் கட்டத்தில் வீரர்கள் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி விளையாடியது பெருமையாக உள்ளது என்றும் ருதுராஜ் தெரிவித்துள்ளார். சிஎஸ்கேவின் வெளியேற்றத்துக்கு வீரர்கள் பலரின் காயங்களும், 3 தோல்விகளுடன் தொடங்கியதுமே காரணம். நடுப் பகுதியில் 8 போட்டிகளில் 6-ல் வென்று பிரகாசமாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை.
“தொடர் ஆரம்பம் கடினமாக இருந்தது. 3 தோல்விகள், காயங்கள், பிறகு வீரர்கள் சரியான இடத்தில் இறங்கி அணிச்சேர்க்கையும் கைகூடி வர பிரகாசமானக் கட்டமும் வந்தது. ஜேமி ஓவர்டன் மற்றும் ஆல்ரவுண்டர் ராமகிருஷ்னா கோஷ் காயங்கள் எங்கள் அணிச்சேர்க்கையை பெரிதும் பாதித்தன. காயங்களினால் ஒன்று பேட்டர் குறைவாகவோ அல்லது ஒரு பவுலர் குறைவாகவோ ஆட நேரிட்டது.
நாங்கள் இளம் அணிதான் என்பதை பலரும் ஏற்க மறுக்கின்றனர். அணி மாற்றத்தில் இருக்கிறது. அனுபவ வீரர்கள் இல்லை. 8 முதல் 10 வீரர்கள் தங்கள் அனுபவத்தில் 20 போட்டிகளில் ஆடியிருந்தால் பெரிய விஷயம். அவர்களுக்கு இது நல்வாய்ப்பாக அமைந்ததில் மகிழ்ச்சியே. நடுவில் 6 வெற்றிகள் அதில் 2 மகத்தான வெற்றிகள் குறித்து பெருமை அடைகிறோம்.
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 10 ஓவர்களில் 84 ரன்களை விளாச முடியவில்லை, பிறகு சென்னையில் அவர்களை 180 ரன்களுக்கு மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இந்த இரண்டிலும் தோல்வி அடைந்தோம். ஆனாலும் இளம் வீரர்கள் பங்களிப்பு பெருமையளிக்கிறது.” என்றார் ருதுராஜ்.