

புதுடெல்லி: இந்தியா, ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகிய இரு தரப்பும் இணைந்து 4-வது இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டை டெல்லியில் மே 28-ம் தேதி முதல் நடத்துவதற்குத் தயாராகி வந்தன. இந்நிலையில், ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் கொடிய எபோலா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, காங்கோ ஜனநாயகக் குடியரசில் ‘பண்டிபுகியோ’ என்ற அரிய வகை எபோலா வைரஸ் பரவி வருகிறது. அங்கு இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா-ஆப்பிரிக்கா அமைப்பின் உச்சி மாநாடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவை இந்திய அரசு எடுத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையக் கண்காணிப்பு, பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் நெறிமுறைகளைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநாட்டுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.