வைபவ் சூர்யவன்ஷி
ஜெய்ப்பூர்: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கு தயாராகும் வகையில் தனது பத்தாம் வகுப்பு தேர்வை தவிர்க்க இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி முடிவு செய்துள்ளதாக தகவல்.
பிள்ளை முகம் மாறாத 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் உலகின் அடுத்த சென்சேஷனாக உருவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய இளையோர் அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் முடிந்த யு19 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்தார்.
அந்த தொடரில் 7 ஆட்டங்களில் 439 ரன்கள் விளாசினார். சிறந்த ஸ்ட்ரைக் ரேட், அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும், தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில், வரும் 17-ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதி வரை தந்து பத்தாம் வகுப்பு தேர்வை வைபவ் சூர்யவன்ஷி எழுதுவதாக இருந்தது. அதை அவர் தேர்வு எழுத இருந்த பள்ளியின் முதல்வரும் உறுதி செய்தார். கிரிக்கெட் வீரர் என்பதால் அவருக்கு தேர்வு எந்தவித தளர்வுகளும் வழங்கப்படாது என தெரிவித்தார்.
இந்த சூழலில் அவரது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா, “இந்த முறை அவர் பத்தாம் வகுப்பு தேர்வை தவிர்த்துவிட்டு ஐபிஎல் சீசனுக்காக தயாராகிறார். தற்போது நாக்பூரில் உள்ள அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சீசனுக்கு முன்னதாக நடைபெறும் முகாமில் இணைந்துள்ளார்” என தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு சீசனில் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 252 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். இரண்டு முறை 30+ ரன்களை கடந்துள்ளார்.