சென்னை: திருச்செங்கோட்டில் புதிய கிரிக்கெட் பயிற்சி மையத்தை சூப்பர் கிங்ஸ் அகாடமி தொடங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி நிர்வாகம் சார்பாக சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி தொடங்கப்பட்டு இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இளம் வயதில் உள்ள திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் இந்த அகாடமி பல பயிற்சி மையங்களை பல்வேறு நகரங்களில் தொடங்கி வருகிறது.
அதன்படி திருச்செங்கோட்டிலுள்ள கேஎஸ்ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் புதிய பயிற்சி மையத்தை சூப்பர் கிங்ஸ் அகாடமி தொடங்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 12-வது பயிற்சி மையத்தை அகாடமி தொடங்கியுள்ளது. உலக அளவில் சூப்பர் கிங்ஸ் அகாடமியால் தொடங்கப்படும் 35-வது மையமாகும் இது. இந்த பயிற்சி மையத்தில் சேர விரும்புவோர் www.superkingsacademy.com என்ற இணைய தளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் இங்கு பயிற்சிகள் தொடங்கவுள்ளன என்று சூப்பர் கிங்ஸ் அகாடமி தெரிவித்துள்ளது. இந்த மையத்தில் திறமையான பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பயிற்சி மையத்தில் 2 டர்ஃப் ஆடுகளங்களும், 2 அஸ்ட்ரோ டர்ஃப் ஆடுகளங்களும், 3 மேட்டிங் ஆடுகளங்களும், 2 மைதானங்களும் உள்ளன. பவுலிங் மெஷின், இரவு நேரத்தில் பயிற்சி பெறும் வசதிகளும் இங்கு அமைந்துள்ளன என்று அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.