

திருத்தணி: திருப்புகழ் திருப்படித் திருவிழா திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் டிச. 31 மற்றும் ஜன. 1-ம் தேதி ஆகிய 2 நாட்கள் திருப்புகழ் திருப்படித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில், இந்தாண்டுக்கான திருப்புகழ் திருப்படித் திருவிழா, இன்று (31-ம் தேதி) காலை தொடங்குகிறது. நாளை (1-ம் தேதி) வரை, 2 நாட்கள் நடைபெற இருக்கிற இத்திருவிழாவில், இன்று காலை 8 மணியளவில், திருத்தணி மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை அருகே உள்ள கோயிலின் முதல் படியில், திருப்புகழ் திருப்படி பூஜை தொடங்குகிறது.
படியில் மஞ்சள் குங்குமம் பூசி வெற்றிலை பாக்கு, பூக்கள், பழங்கள் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து, திருப்புகழ் பாடலுடன் நடைபெற உள்ள இந்த பூஜை, மலையடிவாரம் முதல், கோயில் வரை உள்ள 365 படிகளிலும் நடைபெற உள்ளது. நாளை மாலை வரை இந்த திருப்படி பூஜை நடைபெற உள்ளது.
மேலும், இத்திருவிழாவில், இன்று காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்திலும், நாளை இரவு 8 மணிக்கு தங்கத் தேரிலும் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருப்புகழ் திருப்படித் திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை முதல் நாளை காலை வரை, கோயில் வளாகத்தில் பல்வேறு குழுவினர்களால் திருப்புகழ் பாடல்கள் தொடர்ந்து பாடப்பட உள்ளது.
கோயில் நடை திறப்பு: அதுமட்டுமின்றி, இன்று காலை முதல், நாளை இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும் என, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.