புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள 32 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக விளையாடாமல் இருக்கும் நீரஜ் சோப்ரா இடம் பிடித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளைத் தேர்வுக்கான கூட்டம் இந்திய தடகள சமமேளன வளாகத்தில் நடைபெற்றது. தேர்வு குழுவின் ஆலோசனைக்குப் பின்னர் 32 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2025-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பின்னர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. முதுகு வலி காரணமாக அவர் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில் அவர் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது அவர் குணமடைந்து வரும் நிலையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளாஸ்கோ போட்டிக்குள் அவர் முழுமையாக தேறிவிடுவார் என தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியில் குரிந்தர் வீர் சிங் (100மீட்டர் ஓட்டம்), அனிமேஷ் குஜுர் (200மீட்டர்), குல்வீர் சிங் (5000மீ. 10,000மீட்டர்), தேஜஸ்வின் ஷங்கர் (டெகத்லான் மற்றும் உயரம் தாண்டுதல்), பாருல் சவுத்ரி (3000மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), தேஜாஸ் அசோக் சிர்சே, யஷாஸ் பி, சந்தோஷ்குமார் தமிழரசன், சர்வேஷ் அனில் குஷாரே, ஆதர்ஷ் ராம், தேவ் மீனா, குல்தீப் குமார், ஸ்ரீசங்கர், லோகேஷ் சத்யநாதன், பிரவீண் சித்ரவேல், செல்வப்பிரபு, சமர்தீப் சிங் கில், தஜிந்தர்பால் சிங் தூர், ரோஹித் யாதவ், யஷ்வீர் சிங், டி.கே.விஷால் உள்ளிட்டோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.