பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் நேற்று முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்குடன் பலப்பரீட்சை நடத்தினார்.
ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டும் அவர், இந்த தொடரில் வாகை சூடியிருந்தார். ஒட்டுமொத்தமாக சபலென்கா வெல்லும் 22-வது பட்டம் இதுவாகும்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவுடன் மோதினார். இதில் முன்னாள் முதல் நிலை வீரரான டேனியல் மெத்வதேவ் 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வெற்றி சாம்பியன் பட்டம் வென்றார். ஒட்டுமொத்தமாக அவர், அவரது 22-வது பட்டமாக அமைந்தது.
ஸ்விட்டோலினா சாம்பியன்:
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, சீனாவின் வாங் ஷின்யுவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் எலினா ஸ்விட்டோலினா 6-3, 7-6 (8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஸ்விட்டோலினா வென்ற 19-வது பட்டம் இதுவாகும்.