நகோயா: நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன் வெளிப்பதக்கம் வென்றார். முன்னதாக, இதே மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் உள்ள மைசுஹோ பார்க் தடகள மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
வரும் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 விளையாட்டு வீரர்களும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அகதிகள் அணியினரும் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று காலை ஆறு மணி அளவில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் தகுதி சுற்று மற்றும் அணிகள் பிரிவில் இறுதி சுற்றும் நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் வெள்ளி வென்றனர். இது நடப்பு ஆசிய தொடரில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாக அமைந்தது.
தனிநபர் பிரிவில் இளவேனில் வாளறிவன் வெள்ளி: 27 வயதான இளவேனில் வாளறிவன், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளார். 252.4 புள்ளிகளை பெற்று அவர் இரண்டாம் இடம் பிடித்தார். ஜப்பான் வீராங்கனை ஹினாதா டைச்சி 253 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார்.