அட்லாண்டா: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது அர்ஜெண்டினா அணி.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்தது நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி. ஆட்டத்தின் முதல் 78 நிமிடங்கள் வரை எகிப்து அணி முன்னிலையில் இருந்தது. அடுத்த சில நிமிடங்கள் தாக்கு பிடித்தால் காலிறுதிக்கு அந்த அணி முன்னேறி இருக்கும். ஆனால், அந்த சவாலை அர்ஜெண்டினா வெற்றிகரமாக கடந்து வந்தது.
ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் இப்ராஹிம் மற்றும் 67-வது நிமிடத்தில் ஜிகோ ஆகியோர் எகிப்து அணிக்காக கோல் பதிவு செய்தனர்.
21-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அடுத்து பந்தை கோல் கம்பம் நோக்கி மெஸ்ஸி கடத்தினார், ஆனால் அதை எகிப்து கோல் கீப்பர் தடுத்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் எகிப்து அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது.
கம்பேக் கொடுத்த அர்ஜெண்டினா
இந்நிலையில், இரண்டாவது பாதியில் 79-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார் ரோமெரோ. தொடர்ந்து 83-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். இதன் மூலம் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது.
ஸ்டாப்பேஜ் டைமில் 90+2வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்காக 3-வது கோலை பதிவு செய்தார் என்ஸோ பெர்னாண்டஸ். இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் வெற்றியை வீரர்கள், ரசிகர்கள் என கொண்டாடி தீர்த்தனர். இந்த வெற்றிக்கு பிறகு மெஸ்ஸி கண்கலங்கினார்.