அபிஷேக் சர்மா, சுனில் கவாஸ்கர்
அகமதாபாத்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவை ஆடும் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 7 ஆட்டங்களில் மொத்தமாக 89 ரன்கள் எடுத்துள்ளார். 0, 0, 0, 15, 55, 10, 9 என அவரது டி20 உலகக் கோப்பை (2026) இன்னிங்ஸ் அமைந்துள்ளது. அவரது பேட்டிங் சராசரி 12.71. ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பேட்ஸ்மேனாக அபிஷேக் சர்மா உள்ளார்.
நியூஸிலாந்து உடனான இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி தனது பாணியில் அவர் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இது மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அபிஷேக் சர்மாவை ஆடும் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
“இது மிகவும் கடினமான முடிவு. அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேன். இருந்தாலும் இந்த தொடரில் தான் ஆட்டமிழந்த பாணி குறித்து அறியாமல் உள்ளார். பந்து வீச்சாளர்கள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வீசி அவரை தவறு செய்ய வைக்கின்றனர். அதற்கு தகுந்தவாறு அவரால் அட்ஜெஸ்ட் செய்து ஆட முடியவில்லை. அல்லது அவரது அணுகுமுறையை மாற்றவில்லை என்று சொல்வேன். அதுதான் எனது கவலை.
அதனால் சஞ்சு சாம்சன் உடன் இஷான் கிஷன் இன்னிங்ஸை தொடங்க வேண்டும். அதோடு ரிங்கு சிங்கை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும். இதோடு அணியில் வேறொரு மாற்றமும் மேற்கொள்ள வேண்டும். அணியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும். வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை இழந்துள்ளார். சூப்பர் 8 சுற்று முதல் பெரிய அணிகளுக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களை கொடுத்து தடுமாறி வருகிறார்.
அதனால் பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் குல்தீப் யாதவை ஆடலாம். அவர் ஃபிளாட்டாக் உள்ள ஆடுகளத்தில் பந்தை திரும்ப செய்வார். அதனால் அவர் சரியான தேர்வாக இருப்பார்” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.