அபிஷேக் சர்மா
நாக்பூர்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 48 ரன்களில் வென்றது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக பேட் செய்தனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இதில் 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தற்போது பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன.
இந்த தொடரின் முதல் போட்டி புதன்கிழமை அன்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 5 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். ரிங்கு சிங் 44, சூர்யகுமார் யாதவ் 32 மற்றும் ஹர்திக் பாண்டியா 25 ரன்கள் எடுத்தனர்.
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. முதல் இரண்டு ஓவர்களில் கான்வே (0) மற்றும் ரச்சின் ரவீந்திரா (1) ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் 78 மற்றும் மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்தனர். மிட்செல் 28, ராபின்சன் 21 மற்றும் சான்ட்னர் 20 ரன்கள் எடுத்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 48 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் வருண் மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் தாள் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.