சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. | படம்: ம.பிரபு |
சென்னை: வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.
இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை வரசித்தி விநாயகர் வீதி உலா நடந்தது. இந்நிலையில், நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜையும், வீதிஉலாவும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மங்களகிரி விமானத்தில் சுப்பிரமணியர் வீதிஉலா நடந்தது.
2-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை புறப்பாடும், நாளை இரவு ஆட்டுக்கிடா வாகனம், 24-ம் தேதி இரவு நாக வாகனத்திலும் சுப்பிரமணியர் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார். 25-ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு, 26-ம் தேதி இரவு யானை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 27-ம் தேதி காலை நடைபெறுகிறது. இரவு ஒய்யாளி உற்சவமும், 28-ம் தேதி இரவு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.
29-ம் தேதி இரவு ஆண்டவர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் காலை 7 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடைபெறுகின்றன.
வைகாசி விசாகமான மே 30-ம் தேதி காலை 7.35 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 9 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் புறப்பாடு, சுப்பிரமணியர் வீதிஉலா நடக்கிறது.
அதைத் தொடர்ந்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. பிரம்மோற்சவ நாட்களில் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கு மங்களகிரி விமான புறப்பாடு நடைபெறும்.