சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக சரண கோஷங்கள் முழங்க சந்நிதானத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கி.
குமுளி: சபரிமலையில் மண்டல பூஜையின் உச்ச நிகழ்வாக இன்று (டிச. 27) ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவ. 16-ம் தேதி மண்டல வழிபாட்டுக்காக நடைதிறக்கப்பட்டது.
41 நாள் வழிபாட்டின் உச்ச நிகழ்வாக இன்று மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி, சுவாமிக்கு 420 பவுன் எடையிலான தங்கக் கவச அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
கடந்த 23-ம் தேதி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. நேற்று மதியம் பம்பையை வந்தடைந்த தங்க அங்கி, பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. பின்னர் தலைச்சுமையாக நீலிமலை வழியாக கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கிக்கு, தேவசம் போர்டு சார்பில் சரங்குத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தங்க அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து 18-ம் படி வழியே கொண்டு செல்லப்பட்டு, மாலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இரவு 10.45 மணி வரை ஏராளமான பக்தர்கள் தங்கத்தில் ஜொலித்த ஐயப்பனை தரிசனம் செய்தனர். பின்பு அங்கி அகற்றப்பட்டு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
காலை 10.10 முதல் 11.30 மணிக்குள் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். இத்துடன் மண்டல பூஜை வழிபாடுகள் நிறைவடைய உள்ளன. 28, 29-ம் தேதிகளில் சந்நிதானம் சுத்தம் செய்யப்பட்டு, மகர வழிபாட்டுக்காக வரும் 30-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.